பொங்கல் பண்டிகை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
பொள்ளாச்சி, ; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கலைப்போட்டிகளில் பங்கேற்க பொதுமக்களுக்கு, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.'பொங்கலும் - உழவும் மரபும்' என்ற பெயரில், கலைப்போட்டிகள் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்பட உள்ளன. இதில், கோலம், ஓவியம், புகைப்படம், ரீல்ஸ், பாரம்பரிய உடை, மண்பானை அலங்கரித்தல், ஆவணப்படங்கள், செல்பி ஆகிய கலைப் போட்டிகள் நடக்க உள்ளன.கோலப்போட்டியில், பொங்கல் பண்டிகை மற்றும் தமிழர்கள் மரபுகளை காட்சிப்படுத்தும் கோலங்கள் இட வேண்டும். ஓவியப்போட்டியில் உழவர், பொங்கல் பண்டிகை குறித்த ஓவியங்கள் வரைய வேண்டும்.புகைப்பட போட்டியில் ஜல்லிக்கட்டு, பொங்கல் குறித்த அனைத்து காட்சிகளும் இடம்பெறலாம். கால்நடைகள் அலங்காரம், பாரம்பரிய ஆடைகள், பொங்கலன்று நடக்கும் நிகழ்வுகள் குறித்தும் எடுத்து அனுப்பலாம்.ரீல்ஸ் போட்டியில் நாட்டுப்புற கதைகள், பாடல்கள், சிலம்பாட்டம், கரகாட்டம், ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு காளை மாடுகளை தயார் செய்தல் உள்ளிட்டவை குறித்த, ஒரு நிமிடத்துக்குள்ளான ரீல்ஸ் தயாரிக்கலாம்.செல்பி போட்டியில், பொங்கல் பானையுடன் செல்பி, ஜல்லிக்கட்டு காளையுடன் செல்பி, பொங்கல் நிகழ்ச்சியுடன் செல்பி எடுத்து அனுப்ப வேண்டும். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை எவ்வாறு சிறப்பாக கொண்டாடப்படுகிறது, ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு காளை குறித்த பதிவுகள் எடுத்து அனுப்ப வேண்டும்.பாரம்பரிய உடைப்போட்டிகள் தவிர, மற்ற போட்டிகளில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்பவர்கள், அதற்கான க்யூ.ஆர்., கோடை ஸ்கேன் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். அல்லது, tndiprmh gmail.comஎன்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.