மேலும் செய்திகள்
மனமும் உடலின் ஒரு முக்கிய உறுப்பு!
10-Oct-2025
மு துமை எட்டி பார்க்கும் அச்சமயத்தில், வாழ்க்கை ஓட்டத்தின் வேகம் குறைந்தாலும், பழைய நினைவுகள் மெல்ல எழ ஆரம்பிக்கும். சில நினைவுகள் இனிமையாக இருந்தாலும், சில நினைவுகள், 'அப்படி செய்யாமல் இருந்து இருக்கலாம்', ' பிள்ளைகளுக்கு ஏன் பாரம்', போன்ற பல குற்ற உணவுர்களை ஏற்படுத்தும். நாம் வெளியில் சொல்லாமல் இருக்கும், பல மறைக்கப்பட்ட ரகசியங்கள் நம்மை கேள்வி கேட்க துவங்கி இருக்கும். இப்படிப்பட்ட குற்ற உணர்வுகளை, பெரும்பாலான முதியோர் எதிர்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து, மனநல ஆலோசகர் பிரதீபா நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது: முதுமையில் உடல், மனம் என்பதை தாண்டி, பலர் குற்ற உணர்வுகளால் தங்களை தாங்களே வருத்திக்கொண்டு இருப்பதை, கவுன்சிலிங் வரும் போது பார்க்கின்றோம். குற்ற உணர்வு பல வகையில் உள்ளது. குடும்பத்துடன் நேரம் செலவிடவில்லை, சேமிப்பு செய்யாமல் விட்டுவிட்டோம், பிள்ளைகளுக்கு பாரமாக இருக்கிறோம், உடல் ஆரோக்கியத்தை கவனித்து இருக்கலாம், உறவினர்களுடன் சண்டை தவிர்த்து பேசியிருக்கலாம், இறுதியாக மனைவியிடம் மன்னிப்பு கேட்கவில்லை; நன்றி சொல்லவில்லை என, குற்ற உணர்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். பலர் சிறு வயதில் செய்த, பெரிய தவறுகளுக்கு அப்போது தப்பித்து இருந்தாலும், இப்போது தனக்குத்தானே குற்ற உணர்வு என்ற சிறையில் சிக்கிவிடுவார்கள். குற்ற உணர்வு தொடர்ந்தால் துாக்கமின்மை, மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். நடந்தவற்றைஇனி ஒரு போதும் மாற்ற முடியாது என்பது உணர்ந்து, கடந்து வருவதை தவிர வேறு வழியில்லை. குற்ற உணர்வு என்பதே, நல்ல மனமாற்றத்திற்கான அடையாளம். வாய்ப்பு உள்ளவர்கள், அந்த தவறை சரிசெய்துகொள்ள பார்க்கலாம். முடியாதவர்கள் நெருங்கிய நண்பர்களிடம் மனம்விட்டு பேசி, பாரத்தை குறைத்துக்கொள்ளலாம். உடல் ஆரோக்கியம் உள்ள முதியவர்கள், பொருளாதார பலம் இருந்தாலும் வீட்டில் இருந்து கொண்டு சிறிய தொழில் செய்து, தங்களை பிசியாக வைத்துக்கொள்ளலாம். நம்மை நாமே மன்னித்து, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
10-Oct-2025