உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  துாக்கி எறிவோம் சிப்ஸ், சாக்லேட்...! சிறுதானிய உணவு கண்காட்சியால் மாற்றம்

 துாக்கி எறிவோம் சிப்ஸ், சாக்லேட்...! சிறுதானிய உணவு கண்காட்சியால் மாற்றம்

பீளமேடு: பீளமேடு மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில், மாணவர்களிடையே ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், 'சத்தான உணவு' என்ற தலைப்பில், உணவு கண்காட்சி நடைபெற்றது. இன்று, குழந்தைகள் துரித உணவுகளுக்கு அடிமையாகி வரும் நிலையில், பாரம்பரிய உணவுகளின் மகத்துவத்தை உணர்த்த, இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 5ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்று, தங்கள் வீடுகளிலிருந்து தயாரித்து வந்த, பல்வேறு சத்தான உணவு வகைகளை காட்சிப்படுத்தினர். ராகி, அவல், மற்றும் பல்வேறு சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக வெல்லம், நாட்டு சர்க்கரை மற்றும் தேன் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சிறுதானிய லட்டு, உப்புமா உள்ளிட்ட சத்தான தின்பண்டங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. 1ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்பு மாணவர்களும் பார்வையிட்டனர். அவர்களுக்கு சிறுதானிய உணவுகளின் நன்மைகள் குறித்தும், சத்தான உணவு உட்கொள்வதன் அவசியம் குறித்தும் ஆசிரியர்கள் விளக்கினர். மாணவர்கள் கூறுகையில், 'நாங்கள் வழக்கமாக சிப்ஸ், சாக்லேட் போன்ற பாக்கெட் தின்பண்டங்களையே விரும்பிச் சாப்பிடுவோம். ஆனால், சிறுதானியங்களை கொண்டும் அதே சுவையில், உணவு தயாரிக்க முடியும் என்பது இப்போதுதான் தெரிகிறது. இனி இதுபோன்ற சத்தான உணவு விரும்பி உண்ண முயற்சிப்போம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை