உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலைப்பாதையில் குவி கண்ணாடிகள் மாயம்; வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்

மலைப்பாதையில் குவி கண்ணாடிகள் மாயம்; வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்

வால்பாறை; வால்பாறை மலைப்பாதையில், கொண்டைஊசி வளைவுகளில் பொருத்தப்பட்டிருந்த குவி கண்ணாடிகள் பல இடங்களில் மாயமாகியுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வால்பாறை வரும் சுற்றுலா பயணியர், வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையை கண்டு ரசிக்கின்றனர். ஆழியாறில் இருந்து, வால்பாறை வரை மொத்தம் 40 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. கொண்டைஊசி வளைவுகளுக்கு இடையே, விபத்துகளை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் குவி கண்ணாடிகள் பொருத்தப்பட்டு, எச்சரிக்கை அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், விபத்துகள் வெகுவாக குறைந்துள்ளன. இந்நிலையில், கொண்டைஊசி வளைவுகளில் வைக்கப்பட்டிந்தகுவி கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. சில இடங்களில், குவி கண்ணாடிகள் மாயமாகியுள்ளன. இதனால், கொண்டைஊசி வளைவுகளில் எதிரில் வாகனங்கள் வருவது தெரியாமல், வாகன ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர். வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: ஆழியாறில் இருந்து வால்பாறை வரும் வரையிலான, 40 கொண்டைஊசி வளைவுகளிலும், வாகன விபத்து ஏற்படாமல் இருக்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில் குவி கண்ணாடிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், சில கொண்டைஊசி வளைவுகளில் வைக்கப்பட்டிருந்த குவி கண்ணாடிகள் சேதமடைந்தும், கண்ணாடிகள் இல்லாமலும் இருப்பதால், வாகனங்கள் திரும்பும் போது ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. சேதமடைந்த குவி கண்ணாடிகளை உடனடியாக பொருத்த வேண்டும். இவ்வாறு, கூறினர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'வால்பாறை மலைப்பாதையில் மழையினால் சேதமடைந்த பகுதிகளில் ரோடு சீரமைக்கும் பணி நடக்கிறது. வால்பாறைக்கு வாகனங்களில் வருவோர் தான் குவி கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மீண்டும் அதே இடத்தில் குவி கண்ணாடிகள் பொருத்தப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை