வாட்ஸ் அப்பில் போலி பைல் அனுப்பி நுாதன முறையில் பணம் மோசடி
சோமனூர்; 'வாட்ஸ் அப்' எண்ணுக்கு, வந்த போலி பைலை பதிவிறக்கம் செய்ததால், பணத்தை இழந்தவர்கள், சைபர் போலீசில் புகார் அளித்துள்ளனர். சோமனூர் செந்தில் நகரை சேர்ந்தவர் தங்கராஜ். விசைத்தறி உரிமையாளர். சில தினங்களுக்கு முன், இவருடைய செல்போனுக்கு, அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து ஒரு பைல் வந்துள்ளது. அதை அவர் பதிவிறக்கம் செய்ததுள்ளார். இதையடுத்து, அவர் எந்தெந்த குழுவில் வாட்ஸ் அப் குழுவில் உள்ளாரோ, அக்குழுக்களுக்கு அந்த பைல் அவர் அனுப்பாமலேயே சென்றுள்ளது. நண்பர்கள் பலர் அவரை அழைத்து கேட்டுள்ளனர். சிலர் அந்த பைலை டவுன்லோடு செய்துள்ளனர். இந்நிலையில், டவுன் லோடு செய்தவர்களின் எண்ணுக்கு வரும் குறுஞ்செய்திகள், ஓ.டி.பி., எண்கள், வேறு ஒரு எண்ணுக்கு செல்வதும் தெரிந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினால், இந்தியில் பேசுவது தெரிந்தது. இந்நிலையில், சிலரது வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுத்து மோசடி செய்வது தெரிந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வங்கிக்கு சென்று தகவலை கூறி, பணத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நூதன மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசில் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.