ரூ.ஒரு கோடியில் ஹார்ன்பில் சிறப்பு மையம் இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி
வால்பாறை; ஆனைமலை புலிகள் காப்பகத்தில், ஒரு கோடி ரூபாயில் 'ஹார்ன்பில் சிறப்பு மையம்' அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறையில், வனவிலங்குகள், பறவைகளையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வால்பாறையில், சில குறிப்பிட்ட எஸ்டேட் பகுதியில் 'ஹார்ன்பில்' என்றழைக்கப்படும் இருவாச்சிப்பறவைகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, பழைய வால்பாறை, புதுத்தோட்டம், அக்காமலை கிராஸ்ஹில்ஸ், வில்லோனி, அட்டகட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. இந்நிலையில், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியருக்காக சுற்றுலாத்துறை சார்பில், 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அட்டகட்டி அருகே, 16வது கொண்டை ஊசி வளைவு பகுதியில், 'ஹார்பில் வியூ பாயின்ட்' அமைக்க கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டது. இந்நிலையில், வனத்துறை சார்பில் இருவாச்சி பறவைகள் அதிகம் காணப்படும் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு மையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவு வால்பாறை இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: தென்மாநிலங்களில், மேற்குத்தொடர்ச்சி மலையில் இருவாச்சிப்பறவைகள் அதிகளவில் காணப்படுகின்றன. உலக அளவில், 54 வகையான இருவாச்சிப்பறவைகள் உள்ளன. மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறையில் இருவாச்சிப்பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. உலகின் அரிய பறவைகளில் ஒன்றான, இருவாச்சிப்பறவையை சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கும் வகையில், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறையில் வனத்துறை சார்பில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'இருவாச்சி சிறப்பு மையம்' அமையவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு, கூறினர்.