புறநகரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி
கோவை; கோவை மாவட்டத்தில், 1,387 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 17 மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 2024-25ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வில், கோவை மாவட்ட அரசு பள்ளிகளில் இருந்து, 498 மாணவர்கள், மாநகராட்சி பள்ளிகளில் இருந்து, 43 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், அரசு பள்ளிகளை சேர்ந்த 78 மாணவர்கள், மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 8 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்குத் தகுதி பெற்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், 10 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றனர். தற்போது காரமடை, சூலுார், எஸ்.எஸ்.குளம் உள்ளிட்ட வட்டாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளிலும், இலவச நீட் பயிற்சி மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள, 12 வட்டாரங்களில் விரைவில் பயிற்சி மையங்கள் துவங்கப்படும் என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.