கோவை அரசு மருத்துவமனையில் ஆதரவற்றோருக்கு புத்தாடை
கோவை: கோவை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரியின் எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியல் துறையில் (ஆர்த்தோ),ஆதரவற்றோருக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு, புத்தாடைகள் வழங்கப்பட்டன. அரசு மருத்துவமனையில், அதிக நோயாளிகளை எதிர்கொள்ளும், முக்கிய துறையாக ஆர்த்தோ பிரிவு உள்ளது. வாரத்திற்கு, 35 முதல் 40 பேர் புதிய நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். இதில், 3-4 பேர் ஆதரவு இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். வாரம், மாதக்கணக்கில் சிகிச்சை பெறுபவர்கள் இங்கு உண்டு. 2020ம் ஆண்டு முதல், ஆதரவற்றோர்களை அரவணைக்கும் திட்டம், எலும்பு ஆர்த்தோ பிரிவில் தமிழக அளவில் முன்மாதிரியாக செயல்படுத்தப்பட்டு தற்போதும் தொடர்கிறது. இத்திட்டத்தின் கீழ், ஆதரவற்றோர்களை கவனிக்க பிரத்யேகமாக ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தனியார் பங்களிப்பு இல்லாமல், முதல்வர் விரிவான காப்பீட்டு திட்டத்தில், வரும் நிதி ஆதாரங்களை கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், ஆதரவற்ற நோயாளிகளுக்கு நேற்று, தீபாவளி பண்டிகை முன்னிட்டு புத்தாடை, இனிப்புகளை, அரசு மருத்துவமனை எலும்பியல் பிரிவு இயக்குனர் வெற்றிவேல் செழியன் மற்றும் சக டாக்டர்கள், நேற்று வினியோகம் செய்தனர்.