உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டுப்பன்றிகளை கொல்லும் விவசாயிகள் மீது நடவடிக்கை கூடாது

காட்டுப்பன்றிகளை கொல்லும் விவசாயிகள் மீது நடவடிக்கை கூடாது

மேட்டுப்பாளையம்; விவசாய பயிர்களை சேதம் செய்யும் காட்டுப் பன்றிகளை, வனப்பகுதிக்கு வெளியே கொல்லும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது, வனத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என, தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறுமுகை அடுத்த திம்மராயம்பாளையத்தில் காட்டு பன்றிகளை ஒழிக்க, தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். பழனிசாமி, குமரேசன், ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சின்னராஜ் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவது: காட்டுப்பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விவசாய பயிர்கள் அதிக அளவில் சேதமடைந்து வருகின்றன. இந்த காட்டுப்பன்றிகளை விவசாய நிலங்களுக்கு வருவதை தடுக்க, வனத்துறை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அதனால் வனப்பகுதிக்கு வெளியே, விவசாய நிலங்களுக்கு வரும் காட்டு பன்றிகளை, விவசாய நிலங்களுக்கு வரும் காட்டுப்பன்றிகளை பொதுமக்கள் விவசாயிகள் கொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், அவர்கள் மீது வனத்துறை நடவடிக்கை எடுக்கக் கூடாது. விவசாயத்தை பாதுகாக்கவும், காட்டுப் பன்றிகளால் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதை தடுக்கவும், வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது, வனத்துறை நடவடிக்கை எடுத்தால், கிராமமே ஒன்று திரண்டு போராட்டம் செய்வது என, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் ஏராளமான பெண்கள் விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர். ரங்கராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை