வீட்டுவசதி வாரிய நிலங்களுக்கு தடையின்மை சான்று வேண்டாம்
கோவை : திட்டங்கள் நிறைவேற்றப்படாத நிலங்களை, மீண்டும் கையகப்படுத்தியவர்களிடமே ஒப்படைப்பதால், இனி வீட்டுவசதி வாரியத்திடம் தடையின்மை சான்று பெற வேண்டிய அவசியமில்லை.இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:தமிழகம் முழுக்க வீட்டு வசதி துறையால் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, நிலமெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அத்திட்டங்களை வீட்டு வசதி வாரியத்தால் நிறைவேற்ற முடியாததால், கையகப்படுத்திய நிலங்களை மீண்டும் நிலஉரிமையாளர்களிடமே ஒப்படைப்பு செய்கிறது. அதற்கான உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது.அரசாணையில் குறிப்பிட்டுள்ளதை போல, கோவை வடக்கு தாலுகாவுக்குட்பட்ட கணபதி, காளப்பட்டி, தெலுங்குபாளையம், விளாங்குறிச்சி, கவுண்டம்பாளையம், கோவை தெற்கு தாலுகாவுக்குட்பட்ட உப்பிலிபாளையம், பேரூர் தாலுகாவுக்குட்பட்ட வீரகேரளம், வடவள்ளி, குமாரபாளையம் ஆகிய கிராமங்கள் இடம் பெற்றுள்ளன.அரசாணையில் கண்டுள்ள புல எண்கள் மீது, தமிழ்நாடு வீட்டு வசதி திட்டத்திற்கான நிலமெடுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் திரும்ப பெறப்பட்டுள்ளதால், அப்புலங்களுக்கான வருவாய்த்துறை, பதிவுத்துறை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவு,உள்ளுர் திட்டக் குழுமம் மற்றும் இதர அரசு துறைகளில் விண்ணப்பங்கள் பெறப்படும் நேர்வுகளில், அந்தந்த துறைகளின் விதிமுறைகள், அரசாணைகள், மற்றும் வழக்கமான அலுவலக நடைமுறையை பின்பற்றி, மேல் நடவடிக்கையினை தொடரலாம்.அதனால் பொதுமக்கள், மேற்குறிப்பிட்ட தாலுகா மற்றும் கிராமங்களில் குறிப்பிட்ட புல எண்களுக்காக, இனி வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து தடையின்மை சான்று பெறவேண்டிய அவசியமில்லை.இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.