உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கட்டடம் கட்ட தடையின்மை சான்று அவசியம்: நீலகிரி மாவட்ட நிர்வாகம் கிடுக்கிப்பிடி

 கட்டடம் கட்ட தடையின்மை சான்று அவசியம்: நீலகிரி மாவட்ட நிர்வாகம் கிடுக்கிப்பிடி

-நமது நிருபர்- 'நீலகிரியில், வீடு கட்டும் பணிகளுக்கு சுரங்க துறை உட்பட, பல்வேறு துறைகளின் தடையின்மை சான்று அவசியம்' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிலகிரி மாவட்டம், மலைப்பகுதியில் விடுதிகள், ரிசார்ட்கள், கடைகள் என விதிமீறல் கட்டடங்கள் வெகுவாக அதிகரிக்கின்றன. விதிமீறல் கட்டடங்களை இடித்து அகற்ற, நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும், அதிகாரிகள் இதில் வேகமாக செயல்படுவதில்லை. இந்நிலையில், புதிதாக கட்டடம் கட்டுவதை தடுப்பதில், மாவட்ட நிர்வாகம் கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து, மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு: நீலகிரியில், 1,500 சதுரடி பரப்பளவு வரை வீடு கட்டுவதற்கு, சுரங்கத் துறையின் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும். இதற்கு மேல், 2,690 சதுரடி வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு, சுரங்கம், வனத்துறை ஆகியவற்றின் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும். இதற்கு மேல் உள்ள வீடுகள் மற்றும் வணிக கட்டடங்களுக்கு, ஐந்து வெவ்வேறு துறைகளின் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும். இவ்வாறு, தடையின்மை சான்றிதழ் வழங்கும் துறைகள், சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான விஷயங்களை கவனமாக பார்க்க வேண்டும். அங்கீகாரமில்லாத மனை, ஆக்கிரமிப்பு பகுதி போன்ற நிலங்களுக்கு தடையின்மை சான்றிதழ் வழங்க கூடாது. இது தொடர்பான விதிகள், முந்தைய கட்டுப்பாடுகளை, கவனமாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின், இந்த கிடுக்கிப்பிடியால், விதிகளை முறையாக கடைபடிப்பவர்கள் கூட, வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கட்டுமான துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை