வாக்காளர் பட்டியலில் ஒரு இளைஞர் ஓட்டு கூட விடுபட்டு விடக் கூடாது: மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
கோவை; கோவை மாவட்ட வாக்காளர் பட்டியலில், இளம் வாக்காளர்களை நுாறு சதவீதம் சேர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் நேற்று நடந்தது. அதில், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா பேசியதாவது: கல்லுாரிகளில் முதலாமாண்டு முதல் கடைசி ஆண்டு படிக்கும் இளைஞர்கள் வரை, 17 வயது முதல் 18 வயதுடையவர்கள், தங்களது ஓட்டுரிமையை பெற, ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தால் போதும்; உங்களது வீடு தேடி வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும். உங்களது வீட்டில் யாருக்கேனும் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும், ஆன்லைனில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். ஓட்டுரிமை என்பது, ஒவ்வொரு இந்திய பிரஜைக்கும் அவசியம். கல்லுாரிகளில் தேர்தல் பிரிவினர் சிறப்பு முகாம் நடத்தி வருகின்றனர். தகுந்த ஆவணம் சமர்ப்பித்து, பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம். ஆன்லைன் வாயிலாகவும், பெயரை எளிதாக பதிவு செய்து கொள்ளலாம். இளைஞர்கள் நுாறு சதவீதம் ஓட்டு செலுத்த ஏதுவாக இருக்கும். இளைஞர்கள் ஓட்டு, ஒன்று கூட விடுபட்டு விடக்கூடாது. இவ்வாறு, அவர் பேசினார். அரசு தொழில்நுட்ப கல்லுாரி துணை முதல்வர் தேன்மொழி, உதவி பேராசிரியர் சங்கர்குமார், கோவை வடக்கு தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரான, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் துரைமுருகன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சத்யஷீலா, மாணவ மாணவியர் பங்கேற்றனர்.