ஊட்டி உருளைக்கிழங்கு விலை தொடர்ந்து உயர்வு
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம், செயல்பட்டு வருகிறது. இங்கு, நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை, ஊட்டி உருளைக்கிழங்கு ரூ.2,400 முதல் ரூ. 2,600 வரை விற்பனை ஆனது. தற்போது கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து விலை உயர்ந்து விற்பனையாகி வருகிறது. இதுகுறித்து, கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஊட்டி கிழங்குகள் விலை கடந்த 16ம் தேதி அன்று 45 எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.2,570க்கு அதிகபட்சமாக விற்பனை ஆனது. தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் விலை உயர்ந்து நேற்று ரூ.3,210 க்கு விற்பனை ஆனது. சுமார் 400 மூட்டைகள் லோடு வந்தன. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்,'' என்றார்.