கவுசிகா நதியை ஆக்கிரமித்து சாலை அமைக்க எதிர்ப்பு
கோவை:கோவை கவுசிகா நதி கிளை ஓடையை மறித்து, ஒரு கி.மீ., துாரத்துக்கு சாலை அமைக்கும் முயற்சிக்கு, விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் புகார் அளித்தனர். தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரங்கநாதன் கூறியதாவது: கவுசிகா நதி கிளை ஓடையை பாதுகாக்க, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, கோவை மாநகராட்சி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறையிடம் பலமுறை புகார் தெரிவித்தோம். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார். கிளை ஓடை ஆக்கிரமிப்பை ஊர்ஜிதம் செய்தார். ஒரு கி.மீ., துாரத்துக்கு கிளை ஓடையில் கொட்டியுள்ள மண்ணை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். இன்னும் அள்ளப்படவில்லை. விவசாயிகள் சங்கம் சார்பில், கமிஷனரை மீண்டும் சந்தித்து, மண்ணை அப்புறப்படுத்த மனு கொடுத்தோம்; கலெக்டரிடமும் வலியுறுத்தியுள்ளோம். நடவடிக்கை எடுக்க தவறினால், ஓடை நிரந்தரமாக மூடப்பட்டு விடும். இவ்வாறு, அவர் கூறினார்.