மருத்துவ காப்பீடு செய்த பெண்ணுக்கு சிகிச்சை கட்டணம் வழங்க உத்தரவு
கோவை: இன்சூரன்ஸ் நிறுவனத்தில், மருத்துவ காப்பீடு செய்த பெண்ணுக்கு, சிகிச்சை கட்டணம் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.கோவை, சிங்காநல்லூரை சேர்ந்தவர் நாகராஜன்; ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ.,யான இவர், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில், ஓய்வூதியம் பெறுவோருக்கான, குடும்ப மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சேர்ந்தார்.அதற்கான பிரீமியம் செலுத்தி வந்தார். இந்நிலையில், அவரது மனைவி நாகவேணிக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில், 2021, டிச., 19ல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ கட்டணமாக, 17 லட்சம் ரூபாய் செலுத்தினார்.மருத்துவ செலவு தொகை வழங்க கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு சான்றிதழ்களுடன் விண்ணப்பித்தார். ஆனால், 2.23 லட்சம் ரூபாய் மட்டும், அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. மீதி தொகை வழங்க கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கேட்ட போது, எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.இதனால் இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்தஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'காப்பீட்டு நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரர் மனைவி சிகிச்சை பெற்றதற்கான தொகையில், மேலும், 9.43 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.