காட்டுப்பன்றிகளை சுடும் உத்தரவு; வழிகாட்டுதலுக்கு காத்திருப்பு
- நமது நிருபர் -விளை நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதி வழங்கும் தமிழக அரசின் அறிவிப்பு தொடர்பாக, வனத்துறையினருக்கு இதுவரை எவ்வித வழிகாட்டுதலும் வரவில்லை.காட்டுப்பன்றி, மயில், மான் உள்ளிட்ட விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை துவம்சம் செய்வதால், விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்ற தொடர் குற்றச்சாட்டை தொடர்ந்து, காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி வழங்கும் அறிவிப்பு, கடந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் வெளியிடப்பட்டது.கேரளாவில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மேற்பார்வையில், பயிற்சி பெற்ற துப்பாக்கி சுடும் நபர்களை வைத்து வனத்துறையினர் வாயிலாக, காட்டுப்பன்றிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளின் கீழ் அதற்கான பரிந்துரை வழங்கியுள்ளது.'காப்புக்காட்டில் இருந்து, 3 கி.மீ., தொலைவிற்கு மேல் உள்ள பகுதியில் நடமாடும் காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் சுட அனுமதிக்கலாம்' என, அந்த பரிந்துரையில் தெரிவித்துள்ளது.ஆனால், காட்டுப்பன்றிகளை யார் சுடுவது, எப்போதில் இருந்து, இத்திட்டத்தை அமல்படுத்துவது என்பது போன்ற வழிகாட்டுதல் வரவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.