மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
கோவை; கோவை, செட்டிபாளையம் பகுதியில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.செட்டிபாளையம், கராச்சேரியை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் தங்கராஜ், 38. டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த, 22ம் தேதி செட்டிபாளையத்தில் இருந்து காரச்சேரிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரில் வந்த இரு சக்கர வாகனத்தில் எதிர்பாராத விதமாக தங்கராஜ் சென்ற இரு சக்கர வாகனம் மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அப்பகுதியில் இருந்தவர்கள் தங்கராஜை மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கராஜ் நேற்று இரவு மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தார் முடிவு செய்தனர்.தங்கராஜின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரு நோயாளிகளுக்கு தானம் செய்யப்பட்டது.அவரது உடலுக்கு கிணத்துக்கடவு தாசில்தார் கணேசன் மற்றும் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.