பொங்கும் மகிழ்ச்சி!
தைப்பொங்கலுக்கு மண் பானை உற்பத்தி தீவிரம் பாரம்பரியத்துக்கு மாறும் மக்களால் விற்பனை அதிகரிப்புஉடுமலை, ஜன. 1-பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், உடுமலை பகுதிகளில், மண் பொங்கல் பானைகள் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.தைப்பொங்கல் திருநாளிற்கு, 14 நாட்களே உள்ள நிலையில், பொங்கலுக்கு மண் பானைகள், மண் அடுப்பு, தட்டு ஆகியவை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.உடுமலை, மருள்பட்டி, பள்ளபாளையம், புக்குளம், பூளவாடி, வல்லக்குண்டாபுரம், எரிசனம்பட்டி, எஸ்.வி.,புரம் உள்ளிட்ட பகுதிகளில், இன்றளவும், பாரம்பரிய தொழிலான, மண்பாண்ட தொழிலாளர்கள் ஏராளமாக உள்ளனர்.மண்பாண்டம் தயாரிப்புக்கு என, முத்துக்குளம், தினைக்குளம், கிணத்துக்கடவு கோதவாடி ஆகிய மூன்று குளங்களிலிருந்து, மண் எடுக்கப்படுகிறது.மண் பாண்டங்கள் செய்வதற்கு உகந்த, இந்த செம்மண் மற்றும் களிமண், மணல் ஆகியவற்றை, வடிகட்டி, நன்கு அரைத்து சேறு போல் தயாரித்து, சக்கரத்தில் வைத்து, மண் பானை தயாரிக்கப்படுகிறது.பின்னர், உலர வைத்து, நெளிவுகள் மரக்கட்டையால் மெதுவாக தட்டி சரி செய்யப்படுகிறது. அதற்கு பிறகு, சூளையில் இட்டு, வேக வைத்து விற்பனைக்கு தயாராகிறது.வண்ணங்கள் அளிப்பதும் இயற்கையான முறையில் நடக்கிறது. சிவப்பு நிறத்தில் உள்ள மண் பூசப்பட்டு, அதற்கு பின் வேக வைத்தால், சிவப்பு நிறத்திலும், கருப்பு வண்ணம் வேண்டும் என்றால், இரு முறை வேக வைக்கப்படுகிறது.மற்ற வண்ணங்களும் தேவைக்கு ஏற்ப, இயற்கை முறையில் தயாரித்து, பூசப்படுகிறது. மண் பானைகள், அரை கிலோ முதல், 2.5 கிலோ வரை, பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் மண் பானை தயாரிக்கப்படுகிறது.புதிய மண் பானையோடு, தட்டு, அடுப்பு என பொங்கல் வைப்பதற்கு தேவையான மண் பாண்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.அரை கிலோ கொள்ளளவு கொண்ட மண் பானை, ரூ.60 ; ஒரு கிலோ, ரூ.100; 2.5 கிலோ, 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சிறிய மண் அடுப்பு, 100 ரூபாய்க்கும், பெரியது, 150 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.தோட்டத்துசாளைகள், கோவில்களில் பொங்கல் வைக்க, 5 கிலோ வரை மண்பானை உற்பத்தி செய்யப்படுகிறது. தொழில் நுட்ப வளர்ச்சியால், சில்வர், பித்தளை என மக்கள் மாறிய நிலையில், தற்போது உடல் நலன் மற்றும் இயற்கையை நோக்கி மக்கள் திரும்பியுள்ளதால், மண் பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது.அதிலும், பாரம்பரிய விழாவான, பொங்கல் பண்டிகையை, பாரம்பரியம் மாறாமல், மண்பானையில் பொங்கல் வைக்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. ஒரு லட்சம் விற்பனையாகும்
மருள்பட்டியை சேர்ந்த மண் பாண்ட உற்பத்தியாளர் ரஞ்சித்குமார் கூறியதாவது:பொங்கல் பண்டிகையின், முதல் நாள் சூரியனுக்கு, அடுத்த நாள், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு விவசாயிகளும், ஏழு பொங்கல், 11 என, பொங்கல் என வைத்து வந்தனர். அதற்காக, பொங்கல் பானைகள் வாங்குவர்.கிராமத்திற்கு, 500 பொங்கல் பானைகள் விற்று வந்தது. தற்போது, உலோக பாத்திரங்கள் வருகை காரணமாக, மண் பானை பயன்பாடு குறைந்து, தொழில் செய்தவர்கள் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். தற்போது, மீண்டும் பாரம்பரிய முறையில் மண் பாண்ட பயன்பாடு அதிகரித்துள்ளது.பானை தயாரிக்க, மண் எடுத்து வருவது முதல் அதனை சூளையில் வேகவைத்து விற்பனைக்கு அனுப்புவது வரை ஒரு மாதம் வரை ஆகிறது.தற்போது, மண் பானைகள் உற்பத்தி செய்யப்பட்டு, சூளையிடும் பணி, இயற்கை வர்ணம் பூசும் பணி என விற்பனைக்கு தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது.தற்போது இத்தொழிலில், குறைந்தளவு தொழிலாளர்களே உள்ளதோடு, சிறு வயது முதல் நுணுக்கமான இத்தொழிலை கற்க வேண்டும் என்பதாலும், சிக்கல் ஏற்படுகிறது.தற்போது, பொங்கல் மட்டுமின்றி, உடல் நலன் மற்றும் மண்பாண்ட சமையல் சுவை காரணமாக, அதிகளவு பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில் உற்பத்தியாகும் பானைகள், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது. நடப்பாண்டு பொங்கல் பண்டிகைக்கு, ஒரு லட்சம் பானைகள் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, தெரிவித்தார்.