உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்! ஊராட்சி பணியாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தல்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்! ஊராட்சி பணியாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தல்

பொள்ளாச்சி; 'ஊராட்சிகளில் பணிபுரியும், குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குவோர், துாய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,' என, தமிழ்நாடு ஊராட்சி பணியாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் தெரிவித்தார்.பொள்ளாச்சியில், தமிழ்நாடு ஊராட்சி பணியாளர்கள் நலச்சங்க (குடிநீர் மின்மோட்டார், மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துாய்மை பணியாளர்கள்) கூட்டம் நடந்தது. மாநில தலைவர் பாலு தலைமை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர் குமாரசாமி, ஒன்றிய தலைவர் தர்மராஜ் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குவோர், துாய்மை பணியாளர்களுக்கு கடந்த, இரண்டு ஆண்டுகளாக, தமிழக அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.எனவே, பணியாளர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி மற்றும் நிலுவைத்தொகை வழங்க வேண்டும், என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மாநில தலைவர் கூறியதாவது:தமிழகத்தில், 12,524 ஊராட்சிகளில், குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குவோர், துாய்மை பணியாளர்கள் என, 80ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர்.இவர்களுக்கு, 5,840 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. இது பற்றாக்குறையாக உள்ளதால், தொழிலாளர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.எனவே, அரசு ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குவோர், துாய்மை பணியாளர்கள் தொகுப்பூதிய முறையை மாற்றி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், என, அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம். அரசு உரிய நடவடிக்கை எடுத்து தொழிலார்கள் நலன் காக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ