குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் கவனம் தேவை
பெ.நா.பாளையம்: குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என, பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., பொன்னுசாமி பேசினார்.பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலனி, தம்பு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர், ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் சரக டி.எஸ்.பி., பொன்னுசாமி பேசுகையில், ஆசிரியர்கள் சூழ்நிலையை அறிந்து முடிவெடுக்கும் திறன் உடையவர்களாக இருக்க வேண்டும். நாட்டு நடப்பு மற்றும் உலக நிகழ்வுகளை அறிந்து, மாணவர்களிடம் முறையான உளவியல் அணுகுமுறையை பின்பற்றுபவர்களாகவும் இருக்க வேண்டும். கடவுள் அனைவருக்கும் வழங்கிய பொதுவான சொத்து நேரம் மட்டுமே. எனவே, நேரத்தை வீணடிக்காமல் எந்த ஒரு பணியையும், குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்து முடிக்கும் திறன் பெற்றவர்களாக தங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களின் குடும்ப வரலாறு, தனிப்பட்ட செய்திகளை அறிந்திருக்க வேண்டும். அதே சமயத்தில் அவர்களது ஜாதி, மதம் தொடர்பாக பாகுபாடு காட்டக் கூடாது. போக்சோ சட்டத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் அந்நிகழ்வு தொடர்பாக விசாரித்தல் கூடாது. பெற்றோர்கள், குழந்தைகளின் வளர்ப்பில் கவனம் கொள்ள வேண்டும். மாணவர்கள் மதிப்பெண்கள் தொடர்பாக, பிற மாணவர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் விசாரித்தல் மற்றும் தெரியப்படுத்தக் கூடாது. உலகளாவிய தரவுகளின்படி, அன்பால் மட்டுமே ஒருவரை நல்வழிப்படுத்த முடியும் என்றார்.நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் இந்திராணி சோபியா, போக்குவரத்து காவல்துறை எஸ்.ஐ., ஸ்டெபினா, பள்ளியின் கல்வி இயக்குனர் குணசேகர், உதவி தலைமை ஆசிரியர் மாடசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.