இரு மாதங்களாக குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் போராட்டம்
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கப்பளாங்கரை பகுதியில் இரு மாதங்களுக்கு மேலாக, குடிநீர் வினியோகம் செய்யாததால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிணத்துக்கடவு, கப்பளாங்கரை பகுதி மக்களுக்கு கே.வி.கே., நகரில் உள்ள நீர் உந்து நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது, பொள்ளாச்சி -- பல்லடம் ரோடு மற்றும் கப்பளாங்கரை -- நெகமம் ரோடு விரிவாக்கப் பணிகள் நடந்து வருவதால், அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுகிறது.மேலும், அம்பராம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து கடந்த ஒன்றரை மாதங்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் இல்லை. இதனால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, மக்கள் பாதிக்காத வகையில், குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தை கலைத்து செல்லும்படி அறிவுறுத்தினர்.மக்கள் கூறியதாவது:பொங்கல் பண்டிகையில் இருந்து, இப்பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். கப்பளாங்கரையிலேயே குடிநீர் உந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து, வடசித்தூர், கக்கடவு, செங்குட்டைபாளையம், சோழனூர் போன்ற ஊராட்சிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.ஆனால், கப்பளாங்கரை மக்களுக்கு இரு மாதங்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் இல்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, கப்பளாங்கரை நீர்உந்து நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.