அறிவிப்பின்றி மின் வெட்டு; தவிக்கும் மக்கள்
வால்பாறை; வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு, அய்யர்பாடி துணை மின் நிலையத்தின் வாயிலாக, மின்வினியோகம் செய்யப்படுகிறது. பருவமழை பெய்யும் நிலையில் இடையிடையே பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. முன் அறிவிப்பின்றி மின்சாரம் தடை செய்யப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. மின்தடை காரணமாக, தெருவிளக்குகள், எரியாமல், மக்கள் வன விலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள், மின் தடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு, கூறினர்.