பிரமோத்ஸவ விழா கோலாகலம் தேரில் வலம் வந்த பெருமாள்
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் பிரமோத்ஸவ விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது.பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், 49வது பிரமோத்ஸவ விழா கடந்த, 3ம் தேதி மாலை, 5:00 மணிக்கு துவங்கியது.4ம் தேதி கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், மாலை, 3:00 மணிக்கு புண்யாகவாஜனம், யாக சாலை துவக்கம், மாலை, 6:00 மணிக்கு சிம்மன வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.கடந்த, 5ம் தேதி முதல் கடந்த, 10ம் தேதி வரை தினமும் காலையில் புஷ்ப பல்லக்கிலும், மாலையில், வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது.10ம் தேதி காலையில் பெருமாள், மோகினி அலங்காரத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நேற்று முன்தினம், தவழ்ந்த கிருஷ்ணன் வெண்ணெய்தாழி அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சியும், மாலையில் குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்திலும் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு தேரில் ஏலப்பண்ணுதல், தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலையில், பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில், முக்கிய வீதிகள் வழியாக அலங்கரிக்கப்பட்ட தேரில் தாயாருடன் பெருமாள் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று காலை தீர்த்தவாரியும், மாலையில் துவாதச ஆராதனம், புஷ்ப பல்லக்கில் திருவீதி உலாவும் நடக்கிறது. நாளை விடையாற்றி நிகழ்ச்சியும் பிரமோத்ஸவ விழா நிறைவு பெறுகிறது.