வரும் 27ம் தேதி பி.எப்., குறை தீர்ப்பு கூட்டம்
கோவை; கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் இணைந்து, சந்தாதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில், 'நிதி ஆப்கே நிகட்' (Nidhi Aapke Nikat) என்ற பெயரில், குறை தீர்ப்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வரும், 27ம் தேதி இந்த குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது.இந்த கூட்டம், கோவை குறிச்சியில் உள்ள சிட்கோ தொழில்த்துறை எஸ்டேட் முதல் தளத்திலும், நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி கோடப்பமந்து தொட்டப்பெட்டா சாலையில் உள்ள தொட்டப்பெட்டா தொழிற்சாலையிலும், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை தளிசாலை, இளையமுத்துார் பிரிவில் உள்ள, விஏவி பள்ளியிலும் நடக்கிறது.வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், இ.எஸ். ஐ.சி., உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், காலை 10:30 முதல் 12:30 மணி வரை நேரில் முறையிடலாம். யூஏஎன் (UAN) எண், வைப்பு நிதி கணக்கு எண் அல்லது ஓய்வூதிய நியமன ஆணை எண் அல்லது இ.எஸ்.ஐ.சி., எண் கொண்டு வருவது அவசியம்.பி.எப்., தொடர்பான குறைகளை, pghs.epfindia.gov.inஎன்ற மின்னஞ்சல் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாம்.இந்த தகவலை, கோவை மண்டல வைப்பு நிதி கமிஷனர் -வைபவ் சிங் தெரிவித்துள்ளார்.