| ADDED : ஜன 24, 2024 12:19 AM
- நமது நிருபர் -கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் இணைந்து, பங்குதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில், 'நிதி ஆப்கே நிகட்' (Nidhi Aapke Nikat) என்ற பெயரில் குறை தீர்ப்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வரும் 29ம் தேதி இந்த குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. கோவை பாப்பநாயக்கன்பாளையம் குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை, ஏ பிளாக், முதல் தளத்தில் உள்ள ஜி.டி., ஆடிட்டோரியத்திலும், திருப்பூர் மாவட்டம் பல்லடம்- பனப்பாளையம், பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள மந்திரகிரி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திலும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் கோத்தகிரி மெடிக்கல் பெல்லோஷிப் மருத்துவமனையிலும், குறை தீர்ப்பு கூட்டம் நடக்க உள்ளது.இந்த கூட்டத்தில், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், இ.எஸ்.ஐ.சி., உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் குறைகள் மற்றும் பிரச்னைகள் ஏதேனும் இருந்தால் காலை 10:30 முதல் 12:30 மணி வரை தங்களுக்கு அருகிலுள்ள இடத்தில், நேரில் வந்து முறையிடலாம்.உறுப்பினர், ஓய்வூதியம் பெறுபவர்கள் அவர்களின் யூஏஎன் (UAN) எண், வைப்பு நிதி கணக்கு எண் அல்லது ஓய்வூதிய நியமன ஆணை எண் அல்லது இ.எஸ்.ஐ.சி., எண் கொண்டு வருவது அவசியம்.இத்தகவலை, கோவை மண்டல வைப்பு நிதி கமிஷனர் -வைபவ் சிங் தெரிவித்துள்ளார்.