| ADDED : நவ 27, 2025 01:44 AM
அன்னுார்: தமிழக அரசின், 'கிராமந்தோறும் புத்தொழில்' திட்டத்தில், முதல், 'ஸ்டார்ட் அப்' கிராமமாக பிள்ளையப்பம்பாளையம் தேர்வு செய்யப்பட்டு நேற்று துவக்கி வைக்கப்பட்டது. தமிழக அரசு, 'கிராமந்தோறும் புத்தொழில்' என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் முன்னோடி மற்றும் முதல் கிராமமாக கோவை மாவட்டத்தில், அன்னுார் அருகே பிள்ளையப்பம்பாளையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. விழாவில் ஜி.ஆர்.ஜி., அறக்கட்டளை செயலர் யசோதா தேவி வரவேற்று பேசுகையில், ''இங்கு உள்ள தொழில்நுட்ப பூங்காவில் கிராமப்புற பெண்கள், 10,000 பேருக்கு இலவசமாக தொழில் பயிற்சி தரப்பட்டுள்ளது. இதில், 300 பேர் தொழில் முனைவோர்களாக உருவாகியுள்ளனர்,'' என்றார். 'ஸ்டார்ட் அப் டிஎன்' அமைப்பின் துணை தலைவர் சிவகுமார் பேசுகையில், ''தமிழகத்தில், 100 தொழில் முனைவோர்களை கண்டறிந்து அவர்களுக்கு தலா, ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது. இதில், முதல் முன்னோடி கிராமமாக பிள்ளையப்பம்பாளையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் திறன் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மானியம் வழங்கப்படும்,'' என்றார்.