உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புலிகள் காப்பகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை

புலிகள் காப்பகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை

வால்பாறை, -ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வால்பாறை மலைப்பகுதி அமைந்துள்ளன. இங்குள்ள மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய இரு வனச்சரகங்களில் அரிய வகை வனவிலங்குகளும், பசுமை மாறாக்காடுகளும் நிறைந்துள்ளன.வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், இயற்கைக்கும், வனவிலங்குகளுக்கும் கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை கடந்த, 2019 ஜன., மாதம் முதல் தமிழகத்தில் பயன்படுத்த அரசு தடை விதித்தது. ஆனால், சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும், வால்பாறையில் சமீப காலமாக பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஆழியாறில் இருந்து மலைப்பாதை வழியாக வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர், கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகளை உணவுப்பொருட்களோடு வனப்பகுதியில் வீசி செல்வதால், அதை உட்கொள்ளும் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆழியாறு, அட்டகட்டி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணியர், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணமான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.மேலும், வால்பாறைக்கு சுற்றுலா வருவோர், கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே நின்று, வனவிலங்குகளோடு 'செல்பி' எடுப்பதையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மீறினால் வன உயிரினபாதுகாப்பு சட்டபடி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ