ரேஷனில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி துவக்கம்
வால்பாறை; வால்பாறையில், பொங்கல் பரிசு தொகுப்புக்கான 'டோக்கன்' வழங்கும் பணி துவங்கியது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வால்பாறை தாலுகாவில் மொத்தம், 15,250 ரேஷன் கார்டுகளுக்கு, 47 ரேஷன் கடைகள் வாயிலாக இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளன. இதனை தொடர்ந்து வால்பாறை தாலுகாவில் நேற்று முதல் டோக்கன் வழங்கும் பணி துவங்கியது.வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் கூறியதாவது:வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், வரும், 9ம் தேதி முதல், 13ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். நகரில் உள்ள கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க 'டோக்கன்' முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.ரேஷன் கடை விற்பனையாளர்கள் எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் பொங்கல்பரிசு தொகுப்பினை முறையாக வழங்க வேண்டும்.இவ்வாறு, கூறினார். யானைகள் குஷி
எஸ்டேட் பகுதியில் செயல்படும் ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், 'வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.யானைக்கு மிகவும் பிடித்தமான கரும்பு பொங்கல்பரிசு தொகுப்புடன் வழங்கப்படவுள்ளதால், யானைகளுக்கு பயந்து கடைகளில் கரும்பு இருப்பு வைக்க முடியாமல் தவிக்கிறோம். பொங்கல்பரிசு வழங்கும் நாட்களில் இரவு நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு யானை வராமல் தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்,' என்றனர்.