உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கவுண்டம்பாளையம் டூ சிங்கப்பூர்  விமானத்தில் பறக்குது பொங்கல் பானை

கவுண்டம்பாளையம் டூ சிங்கப்பூர்  விமானத்தில் பறக்குது பொங்கல் பானை

கோவை; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவையில் பொங்கல் பானை விற்பனை துவங்கியுள்ளது. ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.பொங்கல் பானை கால் கிலோ முதல் ஐந்து கிலோ கொள்ளளவுடன், விற்பனை செய்யப்படுகிறது. கோவை கவுண்டம்பாளையத்தில், 20 குடும்பத்தினர் பாரம்பரியமாக இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, மண் கலையகம் உரிமையாளர் கிருஷ்ணவேணி கூறியதாவது: கணுவாய் மண்ணில் செய்யும், தரமான பொருட்கள் போன்று வேறு எங்கும் கிடைக்காது. சுற்றுவட்டார பகுதிகளில் பலர், இங்கு மண் எடுப்பதால், தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. சமையல் பாத்திரங்கள், ஜாடி, டம்ளர், ஜக்கு, உண்டியல், தந்துாரி அடுப்பு என பல பொருட்களை உற்பத்தி செய்கிறோம். பொங்கல் பானைகளை, கடந்த நான்கு மாதங்களாக உற்பத்தி செய்து, தற்போது விற்பனைக்கு தயாராகவுள்ளன. செயற்கை சாயங்கள் எதும் பயன்படுத்துவதில்லை. முழுவதும் செம்மண் அடிப்படையாக கொண்டு, வண்ணம் தீட்டும் பணி நடக்கிறது. 150 முதல் 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 5 கிலோ கொள்ளளவு வரை கொண்ட பானைகள் உள்ளன. கோவை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மொத்தமாகவும் அனுப்புகிறோம். கடந்த வாரம், துபாய், சிங்கப்பூர் நாடுகளுக்கு, 400 பானைகள் அனுப்பியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ