உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 14 உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார்! நாளை வாக்காளர் பட்டியல் ரிலீஸ்

14 உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார்! நாளை வாக்காளர் பட்டியல் ரிலீஸ்

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள, 14 இடங்களுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாளை வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.தேர்தல் நடைபெறும் பூத்கள் குறித்த அறிவிப்புகள், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு மேற்கொள்வதற்காக, பல்வேறு மாவட்டங்களிலிருந்து மின்னணு ஓட்டுப்பெட்டிகள் கோவை வந்துள்ளன.அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், 200 கன்ட்ரோல் யூனிட்டுகளும், 220 பேலட் யூனிட்டுகளும் வந்துள்ளன.கோவையில், தாளியூர் பேரூராட்சி 3வது வார்டு, பொள்ளாச்சி நகராட்சி 7, 12, 21 ஆகிய மூன்று வார்டுகள், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 2வது வார்டு, செட்டிபாளையம் பேரூராட்சியில் 4 மற்றும் 10வது வார்டு, தென்கரை பேரூராட்சி 1வது வார்டு, நெ4 வீரபாண்டி பேரூராட்சியில் 13வது வார்டு, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 2வது வார்டு, வேடபட்டி பேரூராட்சியில் 11வது வார்டு, கோட்டூர் பேரூராட்சியில் 15வது வார்டு, கூடலுார் நகராட்சியில் 23வது வார்டு ஆகிய 14 கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடத்த, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியல், முழுமையாக தயார் செய்யப்பட்டு விட்டது. வாக்காளர் பட்டியலை நாளை காலை 10:00 மணிக்கு, அந்தந்த நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், மாநகராட்சி கமிஷனர் வெளியிடுகின்றனர். இந்த பட்டியல், அந்தந்த ஓட்டுச்சாவடி மற்றும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் வாக்காளர்கள் பார்வைக்கு வைக்கப்படும்.இது குறித்து, கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'முகாம்கள் வாயிலாக, பெயர் நீக்குதல், சேர்த்தல், திருத்துதல், முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வாக்காளர் பட்டியல் தயாராக உள்ளது. பெயர்கள் ஏதுவும் விடுபடவில்லை' என்றனர்.

வருகின்றனர் 'பெல்' நிறுவனத்தினர்

கோவையில் பாதுகாக்கப்பட்டுள்ள, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க, 'பெல் ' நிறுவனத்திலிருந்து தொழில் நுட்ப பணியாளர்கள் வரும், 25ம் தேதியன்று கோவை வருகின்றனர். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார்நிலையில் இருக்கிறதா என்பதை பரிசோதித்து, ஒவ்வொரு இயந்திரமும், 'ரீசெட்' செய்யப்படுகிறது. அதன் பின், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, முதல் நிலை பரிசோதனைக்கு உட்படுத்துவர் (எப்.எல்.சி.). தொடர்ந்து அவற்றை இயக்கி, கன்ட்ரோல் யூனிட் மற்றும் பேலட் யூனிட்டுகளை முழுமையாக இணைத்து, அதில் ஓட்டுப்பதிவாகிறதா என்று சரிபார்ப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை