வடிகால் வசதி இல்லாததால் பொது சுகாதாரம் பாதிப்பு
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, பட்டணத்தில் ரோட்டோரம் திறந்தவெளியில் கழிவு நீர் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது.கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சி, பட்டணம் கிராமத்தில் பஸ் ஸ்டாப் அருகே, அரசு தொகுப்பு வீடுகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கிருந்து நல்லட்டிபாளையம் செல்லும் ரோட்டோரத்தில், பயணியர் அமரும் இருக்கை அருகே அதிகளவு கழிவு நீர் நீண்ட நாட்களாக தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.மழை பெய்யும் நேரத்தில், இங்கு தேங்கி நிற்கும் கழிவுநீருடன் மழை நீர் கலந்து ரோட்டில் வழிந்தோடும். மேலும், இப்பகுதியில் பொது சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் மக்கள், இங்கு அமர்வதை தவிர்த்து, நீண்ட நேரம் வெயிலில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர்.எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில், இங்கு தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்றி, மீண்டும் தேங்காத வகையில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும், என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.