12 லட்சம் ரூபாய் கேட்டு பள்ளி மாணவன் கடத்தல்; சிக்கிய டிரைவருக்கு சிறை
கோவை; ரூ.12 லட்சம் கேட்டு பள்ளி மாணவனை கடத்திய டிரைவரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.கோவை துடியலுாரை சேர்ந்தவர் ஸ்ரீதர் சூர்யகுமார்; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கிருத்திகா, 41. தம்பதியின் மகன் ஜெயசூர்யா, 11; பள்ளி மாணவன்.ஸ்ரீதர் சூர்யகுமாரின் கார் டிரைவர், திருப்பூர் மாவட்டம், முத்துார் ஆலம்பாளையத்தை சேர்ந்த நவீன், 25. சனிக்கிழமை மாலை 3:00 மணிக்கு ஜெயசூர்யாவை, டியூஷன் சென்டரில் இருந்து அழைத்து வர சென்றார். மாலை, 5:00 மேலாகியும், இருவரும் வீடு திரும்பவில்லை.கிருத்திகா, டியூஷன் சென்டருக்கு சென்று பார்த்தார். மாலை 3:00 மணிக்கே நவீன், ஜெயசூர்யாவை அழைத்து சென்றது தெரிந்தது. நவீனை தொடர்பு கொள்ள முயன்ற போது முடியவில்லை. இந்நிலையில் கார் டிரைவர் நவீன், ஸ்ரீதருக்கு போன் செய்து, ஜெயசூர்யாவை கடத்தி சென்றுள்ளதாகவும், ரூ.12 லட்சம் கொடுத்தால் விடுவிப்பதாகவும், பணம் தரவில்லை எனில், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.கிருத்திகா துடியலுார் போலீசாரிடம் இரவு 7:30 மணிக்கு புகார் தெரிவித்தார். வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில், நவீன் ஈரோடு மாவட்டம் பவானி அருகே சிறுவனுடன் இருப்பது தெரிந்தது. துடியலுார் போலீசார், ஈரோடு பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பவானி போலீசார் நவீனை கைது செய்து, இரவு 8:30 மணிக்கு, கோவை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.முதற்கட்ட விசாரணையில், நவீன், ஸ்ரீதரிடம் ஏற்கனவே பணிபுரிந்து வந்ததும், அப்போது அவருக்கு ஊதியம் மற்றும் இடங்கள் விற்பனை செய்து கொடுத்ததற்கான கமிஷன் தொகை ரூ.12 லட்சம் தராததும் தெரியவந்தது. அதை கொடுக்குமாறு நவீன், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஸ்ரீதரிடம் கேட்டுள்ளார். பணத்தை தராததாலேயே சிறுவனை கடத்தி, பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்துள்ளது.