உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாநகராட்சியில் செட்டிங் டெண்டர் முறைகேடு; கட்டுமான ஒப்பந்ததாரர்கள் சங்கம் குற்றச்சாட்டு

கோவை மாநகராட்சியில் செட்டிங் டெண்டர் முறைகேடு; கட்டுமான ஒப்பந்ததாரர்கள் சங்கம் குற்றச்சாட்டு

கோவை: கோயம்புத்துார் மாநகராட்சி கட்டுமான ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஆட்சியில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே டெண்டர் போட முடியும்; அவர்களை மீறி யாரும் டெண்டர் கொடுக்க முடியாது. அதை மீறி யாராவது டெண்டர் கொடுத்தால், அவர்களை அழைத்து மிரட்டுவார்கள். அப்போது, பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தன.இப்போது, பெரிய வேலையாக இருந்தாலும், சிறிய வேலையாக இருந்தாலும் ஆன்-லைனில் யார் வேண்டுமானாலும் டெண்டர் கோர முடியும்.குறைந்த விலைப்புள்ளி கொடுப்பவர்களுக்கு, வேலை உத்தரவு வழங்கப்படுகிறது. சில ஒப்பந்ததாரர்கள் டெண்டர் எடுத்து வேலை செய்யாமல், அக்ரிமென்ட் போடாமல், காலம் தாழ்த்தி, நான்கு அல்லது ஐந்து மாதங்கள் கடந்ததும் வாபஸ் பெற்று விடுகின்றனர்.மறுடெண்டர் கோர பல மாதங்களாகிறது. தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் அவப்பெயர் ஏற்பட வேண்டும் என்கிற நோக்கில் செயல்படுகின்றனர்.மாநகராட்சி எல்லைக்குள், ஆறு சட்டசபை தொகுதிகள் வருகின்றன. தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கும்போது, அவ்வேலைகளுக்கு அவர்கள் சொல்லும் நபர்கள் மட்டும், டெண்டர் கோருகின்றனர்.மற்றவர்கள் டெண்டர் கோரினால், மிரட்டி வாபஸ் பெற வைக்கின்றனர். எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்யப்படும் பணிகளுக்கு, 'செட்டிங் டெண்டர்' முறைகேட்டால், அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !