சிஸ்பா 34வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்
கோவை; தென்னிந்திய நூற்பாலைகள் சங்க (சிஸ்பா) 34வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், செல்வன் தலைமையில் நடந்தது. கவுரவ செயலாளர் ஜெகதீஷ் சந்திரன், வருடாந்திர அறிக்கையை வாசித்து, கடந்த ஆண்டில் சிஸ்பா மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள், தொழில் சார்ந்த கோரிக்கைகள் குறித்து விளக்கினார். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பஞ்சு இறக்குமதி மீதான வரிவிலக்கை, வரும் 2026 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். இந்திய பருத்திக் கழகம், பஞ்சு விற்பனை விலையை, சர்வதேச விலைக்கு இணையாக நிர்ணயிக்க வேண்டும். தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில், இந்திய பருத்திக் கழக கிடங்கை அமைக்க, மத்திய ஜவுளி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய பருத்திக் கழகத்துடன் விற்பனை செய்யும் பஞ்சுக்கான லிப்டிங் பீரியடை, 30 நாட்களில் இருந்து 90 நாட்களாக, மாற்றி அமைக்க வேண்டும். நூற்பாலைகள் பயன்படுத்தும் பஞ்சுக்கு, கிலோ ரூ.10 நுகர்வு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பருத்தி உற்பத்தித் திறன் திட்டத்தில், தன்னிறைவு பெற 7 ஆண்டுகளாவது ஆகும் என்பதால், உற்பத்தியை ஏக்கருக்கு, 25 குவிண்டாலாக உயர்த்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். நூாற்பாலைகளில் திரட்டப்பட்ட, மூலதனப் பொருட்களுக்கான உள்ளீட்டு வரியை, 7 நாட்களுக்குள் திருப்பித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கூரை சோலார் மீதான நெட்வொர்க் கட்டணங்களை, தமிழக அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். மின்வாரியம் உயர்த்தும் அனைத்து கட்டணங்களையும், உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
2025 - -2027ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. உடுமலை சண்முகப்பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அருண் கார்த்திக், சிஸ்பா தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர்களாக, சவுந்தர் டெக்ஸ்டைல்ஸ் வெங்கடேசன், சிறுவாணி யார்ன்ஸ் கிரிராஜன், வேணி லட்சுமி மில்ஸ் பிரதீப், கவுரவச் செயலாளராக ஹைடெக்ஸ் ஸ்பின்னிங் மில்ஸ் ஜெகதீஷ் சந்திரன், இணைச் செயலாளராக, சூரியா ஸ்பின்னிங் மில்ஸ் வெங்கடேச சுப்பிரமணியன், கவுரவ பொருளாளராக வெங்கடாசலபதி டெக்ஸ்டைல்ஸ் விஜயகுமார், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.