தேயிலை செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணி
வால்பாறை; வால்பாறையில், தேயிலை செடிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில் மொத்தம், 32,825 ஏக்கரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில், தேயிலை மட்டும், 25,253 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்நிலையில், வால்பாறையில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யும் நிலையில், தேயிலை செடிகளை கொசு தாக்கி வருவதால், தேயிலை செடிகள் துளிர்விடாமல் உள்ளது.தோட்ட அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறையில் கோடை மழைக்கு பின், தேயிலை உற்பத்தி அதிகரித்து காணப்பட்டது. ஆனால், தற்போது பருவமழை தீவிரமாக பெய்வதால் தேயிலை செடிகள் துளிர்விட முடியாமலும், ஒரு வித கொசு தாக்குதலால் உற்பத்தியும் பாதிக்கபட்டுள்ளது.அதனால், தேயிலை செடிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி நடக்கிறது. மீண்டும் வெயில் நிலவினால் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விட்டு, உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு, கூறினர்.