காரமடை ரயில்வே ஸ்டேஷனில் தெரு நாய்கள் தொல்லை
மேட்டுப்பாளையம்; காரமடை ரயில்வே ஸ்டேஷனில், நாய்களின் தொல்லையால், பயணிகள் அச்சமடைகின்றனர்.மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை வழியாக, தினமும் கோவைக்கு ஐந்து முறை பாசஞ்சர் ரயில் சென்று வருகிறது. காரமடை ஸ்டேஷனில் இருந்து காலை, மாலையில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர்.குழந்தைகளுடன் பெண்களும் இந்த ரயிலில் பயணம் செய்கின்றனர். ஆனால் காரமடை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளும் நடந்து வரும் பாதையிலும், டிக்கெட் வாங்கும் இடத்திலும், தெரு நாய்கள் படுத்துள்ளன. இந்த நாய்கள் கடித்து விடுமோ என்ற அச்சம் குழந்தைகள் மற்றும் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.எனவே சம்பந்தப்பட்ட ரயில்வே துறை அதிகாரிகள், ஸ்டேஷன் வளாகத்திலும், பிளாட் பாரத்திலும் படுத்திருக்கும் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.