கிராமங்களில் மாயமாகும் ஓடை; நீர்நிலைகள் நிரம்புவதற்கு தடை
-- நமது நிருபர் -'கிராமப்புறங்களில், விவசாய நிலம், அரசு நிலங்களில் இருந்த ஓடைகள் மறைக்கப்படுவது தான் குளம், குட்டைகளில் நீர் நிரம்பாமல் போவதற்கு காரணம்' என, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க இயற்கை விவசாய அணி மாநில செயலாளர் வேலுசாமி கூறியதாவது:கிராமங்களில் உள்ள நீர்வழித்தடங்கள், ஆக்கிரமிப்பால் தடைபட்டுள்ளன. கிராமம் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டிய கிராமப்புறங்களில் ரியல் எஸ்டேட் தொழில் வேகமாக நடந்து வருகிறது.விளைநிலங்களை வீட்டுமனையாக மாற்றும் பணியும் நடக்கிறது. ஓடை இருந்தால், வீட்டுமனைக்கான 'அப்ரூவல்' கிடைக்காது.எனவே, விவசாய நிலங்களில் பள்ளவாரி, ஓடை இருப்பின், அவற்றை ஆவணங்களில் இருந்தே மறைத்து, வீட்டுமனைக்கான அங்கீகாரத்தை எப்படியோ வாங்கி விடுகின்றனர். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற அத்துமீறல்கள் நடக்கின்றன.அதனால் தான், பல்வேறு இடங்களில் மழை பெய்தும், குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பாமல் உள்ளன.நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறும் அரசு, ஜி.பி.ஆர்.எஸ்.,தொழில்நுட்பத்தின் உதவியுடன், நீர்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் மறைக்கப்பட்டநீர்நிலைகளை மீட்டெடுத்து, நீர்வளம் காக்க முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.