பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிப்புகள்; மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
ஆனைமலை; ஆனைமலை அருகே ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி. பள்ளி மாணவர்கள், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆனைமலை அருகே ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி. மேல்நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப்படை மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், ரெட்டியாரூர் மற்றும் பாரமடையூரில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் கிட்டுச்சாமி, பிரசாரத்தை துவக்கி வைத்தார். மாணவர்கள் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்களுடன் கோஷங்களை எழுப்பி பிரசாரம் செய்தனர். மேலும், பொதுமக்களின் வீடுகளில் பொது மக்களை சந்தித்து துண்டு பிரசுரம் தந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மக்களிடம் மாணவர்கள் கூறியதாவது: பிளாஸ்டிக் கவர்களில் சூடான பொருட்களை பார்சல் செய்யும் போது, பிளாஸ்டிக் பேப்பர் எளிதில் உருகி பாலி எத்திலீன் ரசாயனம் உணவுப் பொருட்களில் கலந்து, உணவு விஷமாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. பிளாஸ்டிக் எரிக்கும் போது விஷத்தன்மை உள்ள வாயுவான புளூரோ கார்பனை வெளியிடுகிறது. நிலத்தில் பிளாஸ்டிக் புதைக்கப்படும் போது அவை காற்று, நீர் மண்ணுக்குள் புகுவதை தடை செய்கிறது. உணவுடன் உள்ள பிளாஸ்டிக் பைகளை விலங்குகள் விழுங்கும் போது, இரைப்பையில் அடைப்பு ஏற்பட்டு உணவு உண்ண முடியாமல் பட்டினியாக இருந்து உயிர் இழக்க நேரிடுகிறது. கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் கோடிக்கணக்கான கடல் வாழ் உயிரினங்களும், பறவைகளும் இறக்கின்றன. இவ்வாறு, தெரிவித்தனர். மாணவர்களுடன், பள்ளியின் தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன், நாட்டு நலப்பணித்திட்ட பொறுப்பாசிரியர் சிவக்குமார், பள்ளியின் ஆசிரியர் மகாலட்சுமி ஆகியோர் உடன் சென்றனர்.