சதுரங்க போட்டிக்கு பள்ளிகள் அளவில் மாணவர்கள் தேர்வு
கோவை; நடப்பு கல்வியாண்டில் வட்டார அளவில் நடைபெறும் சதுரங்க போட்டிகளில் பங்கேற்பதற்காக, மாணவர்களுக்கான தேர்வு போட்டிகள், நேற்று (ஜூலை 2) அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட்டன.மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நான்கு பிரிவுகளில் (11, 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர்) போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் மாணவ - மாணவியர் என தலா இருவர் தேர்வு செய்யப்பட்டு, ஒரு பள்ளியிலிருந்து 16 பேரை தேர்வு செய்ய மாவட்ட உடற்கல்வி துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மசக்காளிபாளையம், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி சித்தாபுதூர், மணியகாரம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில், மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு. குமரேசன் கூறுகையில், “பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், வட்டார அளவில் நடைபெறவுள்ள சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். வட்டார போட்டிகள் இம்மாதம், இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள், மாவட்ட அளவில் நடைபெறும் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்,” என்றார்.