மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும், கந்த சஷ்டி விழா கோலகாலமாக கொண்டாடப்படும். இந்தாண்டு, கந்த சஷ்டி விழா, கடந்த, 2ம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் யாக சாலை பூஜைகள், அபிஷேக பூஜை, திருவீதி உலா நடந்தது. இந்நிலையில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று மாலை, 3:00 மணிக்கு நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இன்று முதல் வரும், 10ம் தேதி வரை அடிவாரத்தில் இருந்து மலைமேல் செல்ல நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை. இன்று, சட்டக்கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் பகுதியில், பக்தர்கள் தங்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, கோவில் பஸ் மூலமும், படிக்கட்டு பாதை மூலமும், மலைமேல் உள்ள கோவிலுக்கு செல்ல வேண்டும். இன்று, 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.