உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மனம் விட்டு பேசினால் பிரச்னைகள் தீரும்! மன நல டாக்டர் அறிவுரை

மனம் விட்டு பேசினால் பிரச்னைகள் தீரும்! மன நல டாக்டர் அறிவுரை

பொள்ளாச்சி; மனம் விட்டு பேசினால், பிரச்னைகள் தீரும், என, மாவட்ட மனநல டாக்டர் ெஹலினா செல்வக்கொடி தெரிவித்தார். பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மனநலப்பிரிவு சார்பில், தற்கொலை தடுப்பு குறித்து, பள்ளி மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி நேற்று அரசு மருத்துவமனையில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட மனநல டாக்டர் ஹெலினா செல்வக்கொடி கூறியதாவது: பொள்ளாச்சியில் கடந்த ஆண்டில், 1,000 பேர், தற்கொலை எண்ணங்களுடன் சிகிச்சைக்காக வந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்தும், கவுன்சிலிங் வழங்கியும் அவரது எண்ணங்களை மாற்றி அனுப்பி வைக்கப்பட்டது. குடி போதை, போதை வஸ்துக்கள், குடும்ப பிரச்னை, பிடிவாதம் போன்ற காரணங்களினால் தற்கொலை நடக்கிறது.வீட்டு சூழல், நோய், மன நிம்மதியில்லாதது, கடன் தொல்லை போன்ற காரணங்களினால் தற்கொலை செய்து கொள்கின்றனர். மேலும், கணவரை இழந்த பெண்கள், ஒரு ஆண்டுக்கு பின் தற்கொலை செய்வதை காண முடிகிறது. மனதில் வலிமை இல்லாததால் தற்கொலை எண்ணம் துாண்டப்படுகிறது. மனதளவில் உள்ள கஷ்டங்களை யாரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதும் தற்கொலைக்கு வழிவகுக்கும். தனியாக யாரிடமும் பேசாமல் இருப்பவர்களிடம், நண்பர்கள், உறவினர்கள் பேச்சுக்கொடுக்க வேண்டும். மனம் விட்டு பேசும் நிலைக்கு மாற்றி அவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்கள் மனம் விட்டு பேசினால், தற்கொலை எண்ணம் மாறும். மாவட்ட மனநலத்திட்டத்தின் சார்பில், இரண்டு டாக்டர்கள் அடங்கிய குழுவினர், கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், தற்கொலை எண்ணம் உள்ளவர்களை கண்டறிந்து, அவர்களை மனமாற்றம் செய்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. வாரம் மூன்று நாட்கள், பொள்ளாச்சியில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, பள்ளிகள், கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ