லீவு எடுக்க முன் அனுமதி அவசியம்: சுற்றறிக்கையால் ஆசிரியர்கள் அதிருப்தி
கோவை: கோவை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், விடுப்பு எடுப்பதற்கு நிர்வாகத்தின் முன் அனுமதி பெறுவது கட்டாயம் என, சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், ஆரம்பப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை மொத்தம் 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் பலருக்கும், வாக்குச்சாவடி நிலை அலுவலர் (பி.எல்.ஓ.,) பணி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், கற்பித்தல் பணியுடன் சேர்த்து கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக, ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், மாநகராட்சி கல்விப் பிரிவு சார்பில், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'பி.எல்.ஓ., பணியில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அப்பணியில் இல்லாத இதர ஆசிரியர்கள் என அனைவரும், எவ்விதமான விடுப்பு எடுப்பதாக இருந்தாலும், நிர்வாகத்தின் முன் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'பி.எல்.ஓ., பணியால் ஏற்படும் சுமையையும் மீறி, மாணவர்களின் கற்பித்தல் பணியில் எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு செயல்பட்டு வருகிறோம். இந்நிலையில், அவசர தேவைக்கு விடுப்பு எடுப்பதற்குக்கூட, நிர்வாகத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்பது, பணிச்சுமையை மேலும் அதிகரிப்பதாகவும், மன உளைச்சலைத் தருவதாகவும் உள்ளது' என்றனர்.