காரமடை அரங்கநாதர் கோவிலில் பகல் 10 உற்சவம் துவங்கியது
மேட்டுப்பாளையம் : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காரமடை அரங்கநாதர் கோவிலில், பகல் பத்து உற்சவம் நேற்று துவங்கியது. காலை நடை திறந்து மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், திருவாதாரம் ஆகியவை செய்யப்பட்டது. கால சந்தி பூஜை முடிந்த பின், அரங்கநாத பெருமாள், வெள்ளி சிம்மாசனத்தில் வெண்பட்டு குடை சூழ, கோவிலின் உள்ளே வலம் வந்து, ரங்க மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், ராமானுஜர் ஆகியோர் பெருமாள் முன்பு எழுந்தருளினர். அவர்களுக்கு பரிவட்டம் மற்றும் சடாரி மரியாதை அளிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து கோவில் ஸ்தலத்தார்கள் வேதவியாச பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஆகியோருக்கு பரிவட்ட மரியாதை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து திருமொழி திருநாள் தொடக்கத்தில் தமிழ் வேதமாகிய திவ்ய பிரபந்தத்தில், குலசேகர பெருமாள் அருளிச் செய்த, பெருமாள் திருமொழி, திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த திரு நெடுந்தாண்டகம், திரு குறுந்தாண்டகம் மற்றும் பெரிய திருமொழி பாசுரங்கள் ஆகியவற்றை ஸ்தலத்தார்கள் சேவித்தனர். பின்பு வேத மந்திரம், மந்திர புஷ்பம், திருவாராதனம், மங்கள ஆரத்தி ஆகியவை காண்பிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவகர், குணசேகரன், செயல் அலுவலர் சந்திரமதி ஆகியோர் செய்து வருகின்றனர்.