உடல் நலக்குறைவால் உதயநிதி வரவில்லை மானிய கோரிக்கையை முதல்வர் தாக்கல் செய்தார்
சென்னை:சட்டசபையில் நேற்று, துணை முதல்வர் உதயநிதி வசம் உள்ள துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்த நிலையில், அதற்கு பதில் அளிக்க வேண்டிய உதயநிதி, சபைக்கு வரவில்லை. அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் வரவில்லை என, முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.சட்டசபையில் கடந்த 24ம் தேதி முதல், ஒவ்வொரு துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தப்படுகிறது. அந்தந்த துறை அமைச்சர்கள், தங்கள் துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்து, விவாதத்திற்கு பதில் அளித்து வருகின்றனர். அதன்படி, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.இதில், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை மானிய கோரிக்கைகளை, முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை ஆகியவற்றின் மானிய கோரிக்கைகளை, துணை முதல்வர் உதயநிதி தாக்கல் செய்ய வேண்டும். ஏனெனில், அவை அவரது வசம் உள்ள துறைகள். ஆனால், அவர் நேற்று சபைக்கு வரவில்லை.எனவே, அவர் வசம் உள்ள துறைகளின் மானிய கோரிக்கையையும், முதல்வரே தாக்கல் செய்தார். அவர் பேசுகையில், ''கடுமையான உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவர்கள் ஆலோசனைப்படி துணை முதல்வர் ஓய்வில் இருக்கிறார். எனவே, அவரது மானிய கோரிக்கையை தாக்கல் செய்கிறேன்,'' என்றார்.அதன்பின், மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. விவாதம் முடிவில், துணை முதல்வர் பதிலுரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
அமைச்சர்கள் அதிர்ச்சி
வழக்கமாக மானிய கோரிக்கை தாக்கல் செய்வதற்கு முன், துறை அமைச்சர்கள், முதல்வரை சந்தித்து வாழ்த்து பெறுவர். சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு, சக அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், சால்வை, வேட்டி, புத்தகம், பூங்கொத்து போன்றவற்றை வழங்கி வாழ்த்து தெரிவிப்பர். நேற்று துணை முதல்வர் மானிய கோரிக்கை என்பதால், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சிறப்பு பரிசுகளுடன், துணை முதல்வரை சந்திக்க ஆர்வமாக சட்டசபைக்கு வந்தனர். அவர் வராததால் ஏமாற்றம் அடைந்தனர். அவர் உடல் நலக்குறைவு காரணமாக வரவில்லை என்பதை அறிந்ததும், அதிர்ச்சி அடைந்தனர்.