விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
கோவை; விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு, இன்சூரன்ஸ் நிறுவனம், 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. கோவை, ராமநாதபுரம், நாகப்பன் வீதியை சேர்ந்தவர் வாசுகி. இவரது மகன் பிரசாந்த்,35, கடந்த 2022, மார்ச்,21ல், புதிய பைக் வாங்கினார். ஆறு ஆண்டுக்கு, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்தார். இதற்காக, 7,854 ரூபாய் பிரீமியம் தொகை செலுத்தினார். இந்நிலையில், 2022, ஜூனில், சுங்கம் மேம்பாலத்தில், புதிய பைக்கில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் பிரசாந்த் உயிரிழந்தார். பிரசாந்த் இறந்த போது, டிரைவிங் லைசன்ஸ் பயன்பாட்டில் இருந்தது. இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து இருந்ததால், வாகன விபத்துக்கான இழப்பீடு வழங்க கோரி, பிரசாந்தின் தாய் வாசுகி, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால், இழப்பீடு வழங்காமல், விண்ணப்பத்தை நிராகரித்தனர். இதனால், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'தனிப்பட்ட விபத்து பாதுகாப்பு காப்பீட்டு திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு, 15 லட்சம் ரூபாய், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.