உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சிகளுக்கு குடிநீரின் அளவை. உயர்த்தணும் .. அதிக மக்கள் தொகையால் கோரிக்கை

ஊராட்சிகளுக்கு குடிநீரின் அளவை. உயர்த்தணும் .. அதிக மக்கள் தொகையால் கோரிக்கை

சூலூர்: குளிர்காலம் முடிந்து கோடை வந்து விட்டால், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து விடும். அதற்கேற்ப புறநகர் பகுதி ஊராட்சிகளுக்கு வழங்கும் குடிநீரின் அளவு, தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப உயர்த்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கோவை புறநகர் பகுதிகளான சூலூர், சுல்தான்பேட்டை, அன்னூர்,காரமடை மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. பல லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 1 மற்றும், 2 வாயிலாக குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அதிக மக்கள் தொகை இந்நிலையில், புறநகர் பகுதிகள் அபரிதமான வளர்ச்சி பெற்று வருகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்து உள்ளது. அதனால், குடிநீர் பற்றாக்குறையால் ஒவ்வொரு பகுதியிலும், குடிநீருக்காக மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 2011 ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் குடிநீர் வழங்கப்படுவதே தட்டுப்பாட்டுக்கு காரணம். மக்கள் குடிநீர் கேட்டு போராட்டங்களை நடத்துவதால், அதிகாரிகளும் திணறி வருகின்றனர். பொதுமக்கள் கூறுகையில், 'மக்கள் தொகைக்கு ஏற்ப, கூடுதல் குடிநீர் திட்டங்களை புறநகர் பகுதியில் செயல்படுத்த வேண்டும். தற்போது குளிர் காலம் என்பதால், தேவை குறைவாக உள்ளது. கோடை காலம் துவங்கினால் குடிநீர் தேவை அதிகரிக்கும். அதனால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

மாநகரை ஒட்டியுள்ள பகுதிகளில்மக்கள் தொகை அதிகரித்து விட்டது

உள்ளாட்சி துறை அதிகாரிகள் கூறியதாவது : அனைத்து பகுதிகளிலும் மக்கள் தொகை, 10 மடங்கு உயர்ந்துள்ளது. மாநகரை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகம். அதற்கேற்ப குடிநீர் வழங்க முடியவில்லை. 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வழங்க முடிகிறது. அதுவும் குறைந்த அளவே வழங்கப்படுகிறது. மக்களின் தேவையை பூர்த்தி செய்யமுடியாமல் திணறுகிறோம். மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீரின் அளவை அதிகரிக்க வேண்டும். மாநகராட்சியின் மூன்றாவது குடிநீர் திட்டத்தில் இருந்து, மாநகரை ஒட்டியுள்ள உள்ளாட்சிகளுக்கு குடிநீர் வழங்க, மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ