சீரநாயக்கன்பாளையத்துக்கு செல்வோர் திருதிரு; எந்த தெருவுக்கும் பெயர் பலகை கிடையாது
பெயரில்லாத தெருக்கள்
சீரநாயக்கன்பாளையத்தில் பல தெருக்களுக்கு பெயர்ப்பலகை இல்லை. புதிதாக வருபவர்களுக்கு, தெருக்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. இந்தத் தெருக்களுக்கு விரைந்து, பெயர்ப்பலகை வைக்க வேண்டும்.- சங்கர், சீரநாயக்கன்பாளையம். புதிதாய் முளைக்கும் குப்பைக்கிடங்கு
செட்டிபாளையம், மயிலாடும்பாறை பிரிவு, பேருந்து நிறுத்தத்திலிருந்து, கஞ்சிக்கோணம்பாளையம் செல்லும் இணைப்புச் சாலையின் இருபுறத்திலும் தொடர்ந்து குப்பை கொட்டப்படுகிறது. சாலையோரம் பெருமளவு தேங்கியுள்ள குப்பையை அகற்ற வேண்டும். மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்க, நிரந்தர தீர்வு காண வேண்டும்.- ஆனந்த், செட்டிபாளையம். கற்களில் இடறும் பாதசாரிகள்
மருதமலை மெயின் ரோட்டில், சாலையின் இருபுறமும் கட்டடக்கழிவு கொட்டப்பட்டுள்ளது. பாதசாரிகள் நடந்து செல்லும் போது, கற்களில் இடறி விழுகின்றனர். மழை பெய்தால் இப்பாதையில் நடக்கவே மிகவும் சிரமமாக உள்ளது.- முத்துக்குமார், வடவள்ளி. நடைபாதை ஆக்கிரமிப்பு
அவிநாசி ரோடு, ஹோப்காலேஜ் முதல் ஜி.ஆர்.ஜி., பள்ளி வரை உள்ள கடைகள், நடைபாதையை ஆக்கிரமித்துள்ளன. படிகள், விளம்பர பலகைகள், கடைகளின் பொருட்கள் என நடைபாதை முழுவதும் பொருட்களாக உள்ளன. பாதசாரிகள் சாலையில் நடந்து செல்வதால், தினந்தோறும் விபத்துகள் நடக்கிறது.- நாச்சிமுத்து, பீளமேடு. சாலையில் தாறுமாறு பார்க்கிங்
கோவை மாநகராட்சி, 31வது வார்டு, பெரியசாமி லே-அவுட், இரண்டாவது வீதி, மூன்றாவது கிராஸ் பகுதியில், சாலையின் இருபுறமும் பைக்குகள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால், மற்ற வாகனங்கள் செல்வதற்கு மிகவும் இடையூறாக உள்ளது.- அரவிந்த், 31வது வார்டு. நோய் பரவும் அபாயம்
பி.என்.புதுார், 75வது வார்டு, புளியமரம் பேருந்து நிறுத்தம் பின்பறம் உள்ள, கிரீன் அவென்யூவில் பல மாதங்களாக சாக்கடை கால்வாய் அடைத்து நிற்கிறது. கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகளவில் உள்ளதால், நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.- முத்துகுமாரசாமி,பி.என்.புதுார். வீணாகும் குடிநீர்
தெலுங்குபாளையம், பனைமரத்துார், 75வது வார்டு பகுதியில், குடிநீர் குழாய்கள் பல இடங்களில் உடைந்துள்ளது. இதனால், ஒவ்வொரு முறை தண்ணீர் விநியோகம் செய்யும் போதும் அதிக தண்ணீர் வீணாகிறது. கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.- கதிரவன், பனைமரத்துார். சாக்கடை அடைப்பு
சாய்பாபாகாலனி, கே.கே.புதுார், ராமலிங்க நகர், மூன்றாவது வீதியில் சாக்கடை கால்வாய் சரிவர சுத்தம் செய்யவில்லை. கால்வாயில் குப்பை அடைத்து, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கால்வாயினுள் செடிகளும் முளைத்துள்ளது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகம் உள்ளது. - கிருஷ்ண மூர்த்தி, கே.கே.புதுார். குண்டும், குழியுமான ரோடு
கணபதி, 20வது வார்டு, சுபாஷ் நகர் பகுதியில் உள்ள உப்பு தண்ணீர் குழாய் உடைந்து பல மாதங்களாக, கழிவு நீருடன் கலந்து வருகிறது. இப்பகுதியில் ரோடும் மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகனஓட்டிகள் குழி தெரியாமல் விபத்திற்குள்ளாகின்றனர்.- சுவிசேஷ், கணபதி. அகற்றப்படாத மின்கம்பம்
குனியமுத்துார், 87வது வார்டு, நெல்லை முத்து விலாஸ் அருகில் அகற்றப்பட்ட மின்கம்பம் நடைபாதையிலேயே போடப்பட்டுள்ளது. நடப்பதற்கு மிகவும் இடைஞ்சலாக உள்ளது. பொதுமக்கள் நடந்துசெல்லும் போது, கால் தடுக்கி விழுகின்றனர்.- விஷ்ணு, குனியமுத்துார்.