மேலும் செய்திகள்
ஆண்டிபாளையத்தில் மீண்டும் படகு சவாரி
24-Dec-2024
வால்பாறை, ; வால்பாறை படகு இல்லத்தில், கழிவு நீர் தேங்கியுள்ள நிலையில், படகு சவாரியால் சுற்றுலா பயணியர் அதிருப்தியடைந்துள்ளனர்.வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியரின் பொழுதுபோக்குக்காக, நகராட்சி சார்பில் படகுசவாரி துவங்கப்பட்டுள்ளது. படகு சவாரியில் சுற்றுலா பயணியர் பயணம் செய்ய கட்டணமாக, 40 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.இந்நிலையில், படகுஇல்லத்தில் வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் கழிவு நீர், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பை சங்கமிக்கின்றன. இதனால், கழிவு நீரில் சுற்றுலா பயணியர் படகு சவாரி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.படகுஇல்லத்தில் தேங்கி நிற்கும் குப்பை உள்ளிட்ட கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும், என, நகராட்சி நிர்வாகத்திற்கு உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.சுற்றுலா பயணியர் கூறியதாவது:வால்பாறையை கண்டு ரசிக்க மிகவும் ஆர்வத்துடன் வந்துள்ளோம். ஆனால், இங்குள்ள படகு இல்லத்தில் சாக்கடை கழிவு நீருடன், கழிவுகளும் தேங்கி நிற்கின்றன. இதனால் படகுசவாரியில் செல்லவே அச்சமாக உள்ளதோடு, துர்நாற்றத்தால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சுற்றுலா பயணியர் நலன் கருதி, நகராட்சி சார்பில் படகு இல்லத்தில் தேங்கியுள்ள குப்பை உள்ளிட்ட கழிவுகளை உடனடியாக அகற்றி, தண்ணீர் மாசுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், படகுஇல்லத்திலும், நகராட்சி பூங்காவிலும் சுற்றுலா பயணியருக்கு போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, கூறினர்.நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறை படகு இல்லத்தில் தேங்கி இருக்கும் கழிவுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடக்கிறது. வால்பாறை நகரில் ஆற்றோரப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவு நீரை ஆற்றில் விடக்கூடாது.குப்பையை ஆற்றில் வீசுவதை தவிர்த்து, துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். படகு இல்லத்தில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மாசுபடாமல் இருக்க பொதுமக்களும் நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,' என்றனர்.
24-Dec-2024