வடுகபாளையம் ரயில்வே கேட் மீண்டும் திறப்பு ; மக்கள் மகிழ்ச்சி
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி வடுகபாளையம் ரயில்வே கேட் மீண்டும் திறக்கப்பட்டதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொள்ளாச்சி நகராட்சி வடுகபாளையம் செல்வகுமார் விஸ்தரிப்பு வீதியில், 100 ஆண்டுகளாக ரயில்வே கேட் செயல்படுகிறது. வடுகபாளையம் பகுதியில் வசிக்கும் மக்கள், இந்த ரயில்வே கேட்டை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கோவையில் இருந்து வடுகபாளையம் செல்வோரும், சி.டி.சி., மேடு வழியாக ரயில்வே கேட்டை கடந்து செல்வது வழக்கமாக உள்ளது. பள்ளி, கல்லுாரி மணவர்கள், மாற்றுத்திறனாளிகள், துாய்மை பணியாளர்கள் என பலரும் இவ்வழியாகத்தான் சென்று வந்தனர். கடந்தாண்டு ஜூலை மாதம் வடுகபாளையம் ரயில்வே கேட் மூடப்பட்டது. இதையடுத்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ரயில்வே கேட் மீண்டும் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த, 13ம் தேதி ரயில்வே கேட் மூடப்பட்டது. இதனால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து கவுன்சிலர் மகேஸ்வரி, வலிமை குடியிருப்போர் நல சங்கத்தினர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதையடுத்து, சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, தாசில்தார் வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், ரயில்வே கேட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொண்டு, ரயில்வே கேட் திறக்க வலியுறுத்தினர். நேற்று பணிகளை முடித்த ரயில்வே அதிகாரிகள், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விட் டனர். நகராட்சி தலைவர் சியாமளா, துணை தலைவர் கவுதமன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.