உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயிகளை ஒருங்கிணைத்து காய்கறி தோட்டம்; பள்ளிகளில் திட்டத்தை புதுப்பிக்கலாமே

விவசாயிகளை ஒருங்கிணைத்து காய்கறி தோட்டம்; பள்ளிகளில் திட்டத்தை புதுப்பிக்கலாமே

பொள்ளாச்சி; அரசுப்பள்ளிகளில், மாணவர் குழு ஏற்படுத்தி காய்கறி தோட்டம் அமைப்பதால், முறையாக பராமரிக்க முடியும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கழிவுநீர் மேலாண்மை, மறுசுழற்சி முக்கியத்துவத்தை மாணவர்களிடம் எடுத்துரைக்க, 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, மாணவர்கள் குழு அமைத்து, காய்கறித் தோட்டம் அமைக்கப்படுகிறது. இதில் மாணவர்கள் கைகழுவும் நீர், சமையலறையில் பயன்படுத்தம் தண்ணீர் தோட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், இடவசதி உள்ள அரசுப்பள்ளிகளிலும் காய்கறி தோட்டம் அமைக்க முனைப்பு காட்டுவதில்லை. காய்கறித்தோட்டம் அமைக்க, 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால், பல பள்ளிகளில் இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. கிராமப்புற பள்ளிகளில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு மற்றும் மாணவர் குழு வாயிலாக காய்கறி தோட்டம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. தன்னார்வலர்கள் கூறியதாவது: சில பள்ளிகளில் மட்டுமே, தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப காய்கறித்தோட்டம் அமைக்கப்படுகிறது. அதேநேரம், பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், காய்கறி சாகுபடி பிரதானமாக இருப்பதால், விவசாயிகளை ஒருங்கிணைத்து, பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்க திட்டமிடலாம். அவர்கள் வாயிலாக உள்ளூர் காய்கறிகளை பயிரிடவும், வேலி அமைத்தல், களை எடுத்தல், உரமிடுதல், மண்புழு உரம் பயன்படுத்தி தோட்டத்தை பராமரித்தல் போன்ற பணிகளை அறிந்து கொள்ள முடியும். அதேபோல, பள்ளிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மாணவர் குழுக்கள் ஏற்படுத்தி, ஒவ்வொரு நாளில் பராமிக்க நடவடிக்கை எடுக்கலாம். தோட்டத்தில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளை, மதிய சத்துணவில் பயன்படுத்தினால் மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை